செனாய்நகர் அருள்மிகு ஸ்ரீ தேவி பெரியபாளையத்தம்மன் திருக்கோவில் கும்பாபிசேகம் – PART-1

178-வது கும்பாபிஷேகம்.

IMAG1580செனாய்நகர் அருள்மிகு ஸ்ரீ தேவி பெரியபாளையத்தம்மன் திருக்கோவில்

பெருமான்  : விஸ்வநாதர்
அம்பாள்   : விசாலாட்சி
இடம்     : தமிழர் நகர், செனாய்நகர்,அண்ணா நகர்,சென்னை.

தரிசன நாள்         : 18.02.2016
கும்பாபிசேகம் நாள்    : 19.02.2016.

கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்பது ஆன்றோர் வாக்கு. பாரதத்தில் கோவில் இல்லாத கிராமம் ஒன்று கூட இல்லை என்று கூறுமளவுக்கு எல்லா ஊர்களிலும் கோவில்கள் அமைந்திருப்பதை நாம் காணலாம். பொதுவாக அருள்மிகு தெய்வங்கள் சிவன் பெருமாள் இவர்களுக்கு மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் பல இருந்தாலும்,இவ்விரு அருள்மிகு தெய்வங்களுக்கு நினைத்த மாத்திரத்தில் கோவில்கள் கட்டுவது அவ்வளவு சுலபம் என்று சொல்வதற்கு இல்லை. இருந்த போதிலும் காலபோக்கில் இப்போது அம்மன்,வினாயகர் போன்ற திருத்தலங்களிலும் சிவனுக்கு என்று சன்னதிகள் உருவாகியுள்ளது மிகவும் மகிழ்ச்சி தரக் கூடிய செய்தியாகும்.

இவ்வாறு அம்மன் திருத்தலத்தில் எம்பெருமான் விஸ்வநாதருக்கும்  அம்பாள் விசாலாட்சிக்கும் தனியொரு சன்னதி அமைய விருக்கும் திருத்தலம் சென்னையில் செனாய் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி பெரிய பாளையத்தம்மன் திருக்கோவில் ஆகும்.
பேருந்து மற்றும் அனைத்து வகை வாகனங்களின் போக்குவரத்து அதிகம் உள்ள இடத்தில், குறிப்பாக ஜனநடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் எம்பெருமான் கொழு வீற்றிருக்கும் காட்சியினை காணப் போகும் அடியேனுக்கு திருஞான சம்பந்தரின் பதிகப் பாடல் நினைவுக்கு வருகின்றது.  கும்பகோணம் அருகில் அமைந்தள்ள வட குரங்காடுதுறையில் எம்பெருமனை நினைத்து திருஞானசம்பந்தர்  பாடிய பதிகப்பாடலே எனது நினைவுக்கு வந்த பதிகப் பாடலாகும்

‘கோடிடைச் சொரிந்த தேன் அதனொடும் கொண்டல்வாய் விண்டமுன்ன
காடுடைப் பீலியும் கடறுடைப் பண்டமும் கலந்துநுந்தி ஓடுடைக் காவிரி வடகரை அடைமகுரங்காடுதுறை
பீடுடைச் சடைமுடி அடிகளார் இடமெனப் பேணினாரே

அம்பாள் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் வீற்றிருக்கும் சன்னதி செனாய் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி பெரிய பாளையத்தம்மன் திருக்கோவிலில் அமைந்திட வேண்டும்  என்ற எண்ணங்கள் உருவாகி, அவ்வாறு உருவான எண்ணமானது செயல்பாட்டினை  அடையும் நிலையினை அடைவதற்கு காரணமாக இருந்த  நல்ல உள்ளங்களை யான் முதலில் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

IMAG1579சென்னை அண்ணாநகரில் அமைந்துள்ள இடம் செனாய் நகர் ஆகும். செனாய் நகரில் தமிழர் நகர் பகுதியில் அமைந்துள்ள திருத்தலம் ஸ்ரீதேவி பெரிய பாளையத்தம்மன் திருக்கோவில் ஆகும். அண்ணாநகரில் உள்ள சிந்தாமணி சூப்பர் மார்க்கெட் சிக்னலிருந்து கல்லறைச் சாலை நோக்கி செல்லும் போது, மிக அருகில் மீண்டும் ஒரு சிக்னலுடன் கூடிய சாலை சந்திப்பு வரும் இந்த சந்திப்பு முனையில் இத்தலம் அமைந்துள்ளது.

இத்தலத்தின் மகா கும்பாபிஷேகத்தின் ஆரம்ப நிகழ்ச்சியாக, 15.02.2016 அன்று காலை 04.00 முதல் அணுக்ஞை விக்னேஸ்வர் பூஜை, மஹா சங்கல்பம், கணபதி ஹோமம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து 16.02.2016 அன்று நவகிரக ஹோமமும் புனித நீர் எடுத்தல் வைபவமும் நடைபெற்றன. 17.02.2016 அன்று ஸனான பூஜையுடன் லெட்சுமி ஹோமமும் சங்கல்பமும் நடைபெற்றன. 18.02.2016 அன்று ஆசாரிய விசேச சாந்தியுடன் இரண்டாம் காலயாக சாலை பூஜை துவக்கமும் புதிய விக்கிரகங்களுக்கு கண் திறப்பு விழா மற்றும் மாலையில் ஆசார்ய விசேச சாந்தியுடன் மூன்றாம் கால யாக சாலை பூஜையும் நடத்தப்பட்டன. இத்தலத்தின் மகா கும்பாபிசேகம் 19.02.2016 அன்று காலை 05.00 மணி முதல் நான்காம் கால யாக பூஜை துவக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு காலை 08.15 மணியளவில் விமாக மகா கும்பாபிசேகம் நடைபெற இருக்கின்றது. இத்திருத்தலம் செல்வதற்கு 18.02.2016 அன்று வாய்ப்பு கிடைத்தது குறித்து பெரு மகிழ்வு கொள்கிறேன்.

இத்தலத்தில் அருள்மிகு  ஸ்ரீதேவி பெரிய பாளையத்தம்மன் தனியொரு சன்னதியில் முக்கிய மூலவராக இருந்து பக்தர்களை அருள்பாலிக்கின்றாள். தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் அம்மன் வடக்கு நோக்கி இத்தலத்தில் அருள்பாலிக்கின்றாள். இத்தலத்தில் 19.02.2016 கும்பாபிசேகத்தின் போது பக்தர்கள் எம்பெருமான் விஸ்வநாதரையும் அம்பாள் விசாலட்சுமியையும் தனி சன்னதியில் வழிபடுவதற்கு மூர்த்திகள் பிரதிஸ்டை செய்யப்பட இருக்கின்றன என்பதனை அறியும் போது என் மனம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றது.

மேலும் இத்தலத்தில் வலம்புரி வினாயகரையும், வழிவிடு முருகன் மற்றும் பரிவார மூர்த்திகளையும் வழிபடலாம். நவகிரக வழிபாடும் இத்தலத்தில் நடைபெறுகின்றது. இத்தலத்தின் பிரதான அர்ச்சகர் சிவஸ்ரீ. முத்துமணி குருக்கள் ஆவார். இத்தலத்தில் இளைஞர் குழுவினர் மிக சிறப்பாக செயல்படுவது மிகவும் பாராட்டத்தக்க செய்தியாகும். ‘கும்பாபிசேகம்.காம்‘ இணையதளத்து மூலம் இத்தலம் பற்றி அறிய வாய்ப்பு கிடைத்த மெய்யன்பர்கள் இத்தலத்திற்குச் சென்று எம்பெருமான் அருளும், அம்பாளின் அனுக்கிரகமும் பெற்று திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் இத்திருத்தலத்தின் செய்தியினை இணைதளத்தில் பதிவு செய்கிறேன்.

ponrajச.பொன்ராஜ்,

7ஃ497 ‘டி’ பகுதி,சிட்கோநகா; 58வது தெரு, வில்லிவாக்கம் சென்னை-600 049
ponpuni2002@gmail.com
கையகப் பேசி – 9962040695
தொலைபேசி – 26171965